View Single Post
Old 11-18-2008, 07:36 PM   #1
brraverishhh

Join Date
Jan 2006
Posts
5,127
Senior Member
Default MD-Lyricist Working relationship
கண்ணதாசன்- எம்.எஸ்.வி, இளையராஜா - வைரமுத்து இவங்க காலத்தோடு மியூசிக் டைரக்டர், கவிஞர்கள் சேர்ந்து உட்கார்ந்து பாடல்கள் உருவாக்கிய காலம் மலையேறிப் போயிடுச்சு. இப்ப கவிஞர்கள் இசையமைப்பாளர்களைச் சந்திக்காமலே பாட்டு எழுதிடுறாங்க.அவ்வளவு அவசரக் காலமாயிடுச்சு.'' இது கோடம்பாக்கத்தின் நீண்ட கால புலம்பல்.

``மியூசிக் டைரக்டர்கள் பிஸியா இருக்காங்க. அதனால தான் நாங்க ட்யூனை வீட்டுக்கு வாங்கி வந்து எழுதுறோம்'' என்று கவிஞர்களும்;

``கம்போஸிங்ல எழுதினா லேட்டாகிறது'' என்று மியூசிக் டைரக்டர்களும் ஒருவர் மீது ஒருவர் புகார் வாசிக்கிறார்கள்.

இதில் எது உண்மை. `கவிஞர் காதல்மதியை அழைத்துக் கொண்டு மியூசிக் டைரக்டர் ஸ்ரீகாந்த் தேவா முன் நின்றோம். படு சீரியஸான விஷயத்தைச் சிரித்துக் கொண்டே விவாதித்தனர் இருவரும்..

``ஒரு பாட்டு, ட்யூனை வெச்சுதான் அமையும். இதைத்தான் கண்ணதாசன் காலத்துல மீட்டருக்கு மேட்டர்னு சொல்வாங்க. கவிஞரும், மியூசிக் டைரக்டரும் உட்கார்ந்து பாட்டெழுதும் போது ட்யூனை இன்னும் செதுக்கலாம். ஹிட் கொடுக்க எப்படி இன்னும் மாற்றிப் பண்ணலாம்னு யோசிக்கலாம். அதுக்குத் தகுந்த பாடல் வரிகளை உடனே எழுதிப் பார்க்க வசதியாக இருக்கும். இப்போ ட்யூனை சி.டி.யில வாங்கிட்டுப்போயி வீட்லயே எழுதறாங்க. இதனால நாம வேற புது ஐடியா வந்தாலும் அந்த ட்யூனை சிறப்பாக்க முடியறதில்லை '' என்று பல்லவி பாடினார் ஸ்ரீகாந்த் தேவா.

``எல்லா கவிஞர்களும் வீட்ல போயி பாட்டு எழுதுறாங்கன்னு சொல்ல முடியாது. சிலருக்கு பூங்காவோ, அமைதியான அறையோ இருந்தால் பாட்டு வரிகள் மளமளன்னு வந்து விழும். இதுல பல்லவிக்குத்தான் ரொம்பவும் மெனக்கெடணும். அது ரசிகர்களை ரீச் பண்ணினாதான் பாட்டு ஹிட் ஆகும். அதனால கொஞ்சம் டைம் தேவைப்படும். தனிமை தேவைப்படும். இதுதான் காரணமே தவிர, உடனே எழுதத் தெரியல என்பது தவறு.''

``கவிஞர்களை குறை சொல்றீங்களே, நீங்க ஏன் குத்துப்பாட்டு போடு றீங்க? மெலடியையே காணோமே'' என்று எதிர்க்கேள்வி கேட்டார் காதல்மதி.

``இதுக்கு இசையமைப்பாளர்கள் மட்டுமே பொறுப்பில்லை. டைரக்டர்கள், ரசிகர்கள் இப்படி நிறையப் பேர் . இந்த மாதிரியான பாட்டு ஹிட்டாகிடுது. சினிமாவுக்கு வெற்றிதான் முக்கியம்.'' பதிலடி கொடுத்தார் ஸ்ரீ.

``ரசிகர்கள் விரும்புறாங்கனு பழிபோடாதீங்க. நீங்க மெலடி பாட்டு மூலமா அவங்கள மாத்த முடியுமே. விஸ்வநாதன்- கண்ணதாசன் பாட்டு போட்டாங்கன்னா, தொழிலை மீறிய நட்பு அவங்ககிட்ட இருந்தது. பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து இவங்களோடதும் நட்புக் கூட்டணி. அதனால எல்லாரும் ஃப்ரெண்ட்லியா மீட் பண்ணி பாட்டு கம்போஸ் பண்ணினாங்க.

உங்க மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க. அன்றைக்கு இருந்த கவிஞர், இசையமைப்பாளர் நட்பு இப்போ இருக்கா? காரணம் பாதிப் பேர் பகுதி நேர கவிஞர்களா இருக்காங்க. பார்ட் டைம்ல பாட்டு எழுதினா கதைக்குள்ள உணர்வுபூர்வமா யாரால பயணிக்க முடியும்? கவிஞர்கள் கதைக்குள் பயணிக்கிறதால கிடைக்கிற ஒரு மெல்லிய அனுபவத்தைச் சொல்றேன். `நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்துல வர்ற `சொன்னது நீதானா... சொல்... சொல்...' என்ற பாட்டு முடிவுல `சொல் சொல்' என்று வருகிற இடத்துல விம்மி அழுகிற குரல் மட்டும்தான் பதிவு செய்திருந்தாங்க. இதைக் கேட்டுட்டு கண்ணதாசன் `இந்த விம்மல் பாட்டுல வந்தா நல்லா இருக்காது. அதனால சொல்... சொல்... என்னுயிரே' என்ற வரியைப் போடலாம் என்று சொன்னார். இதைப் பகுதி நேர கவிஞர்களால் செய்ய முடியுமா'' என்று காதல்மதி சொன்னதும், ``சொன்னது நீதானா... சொல்... சொல்...'' என்று பார்த்தார், ஸ்ரீகாந்த் தேவா.

``உண்மையிலேயே இனிமையா இருக்கு.''

``அதுக்குக் காரணம் கவிஞரும் இசையமைப்பாளரும் ஒண்ணா உக்காந்து எழுதுனதுதான். இப்போ சொல்லுங்க?'' என்று காதல்மதி கேட்க, ஒப்புக்கொண்டார் ஸ்ரீகாந்த் தேவா.

இனிமேல் இதுபோன்ற இனிமையான பாடல்களை இவர்களிடமிருந்து எதிர் பார்க்கலாம்..

kumudam 19.11.08
brraverishhh is offline


 

All times are GMT +1. The time now is 03:28 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity