Thread
:
தேவாரம்
View Single Post
06-15-2008, 06:28 AM
#
15
Effopsytupt
Join Date
Oct 2005
Posts
448
Senior Member
திருநாவுக்கரசர் தேவாரம்
தலம் : திருவதிகை வீரட்டம்
திருத்தாண்டகம்
ஆறாம் திருமுறை
திருவடித் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
வைதெழுவார் காமம் பொய் போகா அடி
வஞ்ச வலைப்பாடொன்று இல்லா அடி
கைதொழுது நாம் ஏத்திக் காணும் அடி
கணக்கு வழக்கைக் கடந்த அடி
நெய் தொழுது நாம் ஏத்தி ஆட்டும் அடி
நீள்விசும்பை ஊடறுத்து நின்ற அடி
தெய்வப் புனற் கெடில நாடன் அடி
திருவீரட்டானத்து எம் செல்வன் அடி. 6.6.3
திருச்சிற்றம்பலம்
பொருளுரை:
இகழ்ந்து உரைப்பவர்களின் விருப்பங்களும்
அவர்கள் பொய்யும் சென்று சேராத திருவடி;
வஞ்சித்து ஆழச்செய்யாத (பழியிலாத்) திருவடி;
கை தொழுது நாம் பரவிக் காணும் திருவடி;
(நம்) தந்திரங்கள், (உலக) வழக்கங்களைக் கடந்த திருவடி;
நாம் தொழுதேத்தி நெய்யால் ஆட்டும் திருவடி;
நீண்ட வானத்தைக் கடந்து நின்ற திருவடி;
தெய்வத்தன்மை உடைய நீரான கெடில நாடுடையான் திருவடி;
திருவீரட்டானத்தில் உறையும் எம் செல்வன் திருவடி!
Notes:
1. வைதெழுவார் காமம் பொய் போகாவடி
ஒ: சங்கரன் சார்ந்தவர்க்கல்லால் நலமிலன் - அப்பர்
பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே - அப்பர்
சிந்தை செய்பவர்க்கல்லால் சென்று கைகூடுவதன்றால்
.... அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே - சம்பந்தர்
2. வஞ்ச வலைப்பாடு இல்லா அடி
(சிவபெருமான் வழுவியவர்களையும் நெறிப்படுத்துவாரே அன்றி,
ஒரு பொழுதும் வஞ்சித்து ஒரு உயிரைக் கேட்டிற்குத் தள்ளியதில்லை.)
ஒ: திங்கள் சூடினரேனும் திரிபுரம் எரித்தனரேனும்
எங்கும் எங்கள் பெருமான் புகழலது இகழ் பழி இலரே - சம்பந்தர்
பழியில் புகழாய் - சம்பந்தர்
3. கணக்கு வழக்கை கடந்த அடி
ஒ: அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
இவனிறைவன் என்று எழுதிக் காட்டொணாதே - அப்பர்
திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்
முறையுளி யொற்றி முயன்றவர்க்கு ஒளித்தும்
ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து
உற்றவர் வருந்த உறைப்பவர்க்கு ஒளித்தும்
மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும்
இத்தந்திரத்தின் காண்டும் என்று இருந்தோர்க்கு
அத்தந்திரத்தின் அவ்வயின் ஒளித்தும்
முனிவற நோக்கி நனி வரக் கௌவி
ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து
வாள் நுதற் பெண்ணென ஒளித்தும் சேண்வயின்
ஐம்புலன் செலவிடுத்து அருவரை தொறும் போய்த்
துற்றவை துறந்த வெற்றுயிர் ஆக்கை
அருந்தவர் காட்சியில் திருந்த ஒளித்தும்
ஒன்று உண்டு இல்லை என்று அறிவு ஒளித்தும் - மணிவாசகர்
4. நெய் தொழுது நாம் ஏத்தி ஆட்டும் அடி
அபிடேகப் பொருள்களில் நெய் முத்திப் பயன் பெற
ஆட்டப் பெறுவது. எனவே மிகவும் சிறப்புடையது.
Quote
Effopsytupt
View Public Profile
Find More Posts by Effopsytupt
All times are GMT +1. The time now is
07:36 PM
.