LOGO
Reply to Thread New Thread
Old 12-11-2009, 01:38 AM   #1
9mm_fan

Join Date
May 2007
Age
53
Posts
5,191
Senior Member
Default Gduimallam- Most Ancient Lingam by Ankarai Krishnan
தொன்மையான குடிமல்லம் லிங்கம்-ஆங்கரை கிருஷ்ணன்.

http://ankaraikrishnan.wordpress.com/ - You can visit the Blog of the Friend to see Picture of the Temple AND Ancient Lingam

உலகம் முழுதும் இறைவனை வழிபடுவதில் தொன்மையானது லிங்கவழிபாடு ஆகும். தற்போதைய நிலையில் மிகவும் பழமையான லிங்கங்கள் என்பது

1. ஆந்திரா குடிமல்லம் பரசுராமேஸ்வரர் ஆலய லிங்கமும்

2. “பிடா” எனுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டு லக்னோ அருங்காட்சியகத்தில் உள்ள பஞ்சமுக லிங்கம் ஆகும்.

நாம் முதலில் குடிமல்லம் லிங்கம் பற்றி விரிவாகக் காண்போம். ஆந்திர மாநிலத்தில் குடிமல்லம் என்ற ஊரில் உள்ள பரசுராமேசுவரர் கோவிலில் வழிபடப் பெறுகிறது. இவ்வூர் சென்னைக்கு அருகே காளஹஸ்தியிலிருந்து 21 கி.மீ., தொலைவிலும், ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு தென் கிழக்கே 11 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வூருக்கு சற்று தொலைவில் சுவர்ணமுகி ஆறு ஓடுகிறது.



குடிமல்லம் பரசுராமேசுவரர் கோவில் மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் போற்றி பாதுகாக்கப்படுகிறது. `குடி’ என்றால் தெலுங்கில் `கோவில்’ என்பது பொருள். இக்கோவிலை 1903ம் ஆண்டு கல்வெட்டு அறிஞர் வெங்கய்யா ஆய்வு செய்து இதன் சிறப்பினை எடுத்துக் கூறினார். இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டுகளின் வரலாற்றுச் சிறப்பினை தொல்பொருள் ஆய்வு அறிஞர் கோபிநாதராவ் எடுத்துரைத்தார்.

தொன்மைச் சிறப்புமிக்க பரசுராமேசுவரர் கோவில், குடிமல்லம் சிவபெருமானை லிங்க வடிவிலே கண்டு போற்றி வழிபடுகிறோம். மிகவும் தொன்மையான அற்புத வடிவம் கொண்ட சிவலிங்கம், இக்கோவிலில் 1973ம் ஆண்டு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டபோது வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப் பொருட்கள், கல்வெட்டுகள் ஆகியவை கிடைத்தன. இக்கோவிலின் தொன்மைச் சிறப்பினை ஆய்வாளர் ஐ.கே.சர்மா என்பவர் தமது `சைவ சமய கட்டடக்கலை வளர்ச்சி’ என்ற ஆங்கில நூலில் ஆய்வுக்கட்டுரையாக எழுதியுள்ளார். இனி இக்கோவிலை காண்போம்!

கிழக்கு நோக்கிய திருக்கோவில். கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்ற அமைப்புகளை உடையதாக விளங்குகிறது. தொண்டை நாட்டுப் பகுதிக்கே உரிய தூங்கானை வடிவில் (கஜபிருஷ்டம்) கருவறை அமைந்துள்ளது. கருவறையின் பின்பகுதி வட்டவடிவமாக அமைந்திருக்கும். கருவறையின் தேவகோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பெருமாள், பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வ வடிவங்கள் அமைந்துள்ளன. இவற்றில் தட்சிணாமூர்த்தி வடிவம் சிறப்பானது. தமது மேலிரு கரங்களில் அட்சமாலையும், கெண்டியையும் தாங்கியிருக்கிறார். இடதுமேற்கரத்தில் கெண்டியைத் (கமண்டலம்) தாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கோவிலில் நுழைந்து செல்லும்போது மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஒன்றுக்கொன்று சற்று பள்ளமாக அமைந்திருப்பதால் `குடிபள்ளம்’ எனவும் இப்பகுதியில் அழைக்கின்றனர். கோவிலில் அம்மன் `ஆனந்தவல்லி’ என்ற பெயருடன் தனிச்சன்னிதியில் அங்குசம் – பாசம், அபய – வரத கரங்களுடன் கருணை பொங்கும் முகப்பொலிவுடன் அருள்மழை பொழிகிறாள். திருச்சுற்றில் பரிவார கோவில்கள் உள்ளன. இவற்றில் வடகிழக்கில் காணப்படும் சூரியன் திருமேனி தொன்மையானதாகும். நுழைவு வாயிலில், மேல் கோபுரம் இல்லாமல் தட்டையாக உள்ளது.

இக்கோவிலில் 25க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பிற்கால பல்லவ மன்னர்கள், பான அரசர்கள் சோழமன்னர்கள், யாதவராயர்கள் இக்கோவிலைப் போற்றி சிறப்பான வழிபாட்டிற்கு தானமளித்ததைக் கல்வெட்டுகளின் மூலம் அறிகிறோம். கல்வெட்டுகளில் இவ்வூர் திருவிப்பிரம்பேடு பேரம்பேடு என அழைக்கப்படுகிறது.

இங்கு கோவில் கொண்டுள்ள இறைவன் பரசுராமேசுவரமுடைய நாயனார் என்றும் பரசுராம மகாதேவர் எனவும் அழைக்கப்படுகிறார். முதலாம் ராஜராஜசோழனால் இக்கோவிலில், விளக்கு எரிக்கவும், இறைவனுக்கு அபிஷேகம் செய்ய கிணறு அமைக்கவும் தானம் அளிக்கப்பட்டது. விக்கிரம சோழன் காலத்தில் இக்கோவில் திருப்பணி செய்யப் பெற்று மீண்டும் கட்டப்பட்டன என்பதை அறிய முடிகிறது. கருவறையில் மிகவும் அற்புதமான சிவலிங்க வடிவம் வழிபடப் பெறுவதைக் காணலாம்.

அருகிலுள்ள திருப்பதி மலைத்தொடரில் காணப்படும் மிக மென்மையான சிவப்பு நிற எரிமலைக் கல்லால் இந்த லிங்கம் செய்யப்பட்டுள்ளது. இக்கல்லினைப் பளபளப்பாக மெருகேற்றி, மூலஸ்தானத்தில் தரையில் எழுச்சியுற்றுக் காணப்படும் பாறையைக் செவ்வக வடிவில் செதுக்கி, நடுவில் குழிவாகக் குடைந்து பிண்டிகையை (பீடத்தை) உருவாக்கியுள்ளது. லிங்கம் இப்பிண்டிகையில் பொருத்தப் பட்டுள்ளது. இந்த லிங்கம் 5 அடி உயரமுள்ளது.

லிங்கம் மேலே சற்று விட்டு 7கோணமாக செதுக்கப்பட்டு, முன்புறப் ப்குதியில் சிவபெருமானின் அழகிய உருவம் செதுக்கப்பட்டுள்ளது.சிவபெருமான் மனித உருவில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இரண்டு கரங்கள். வலது கரத்தில் உயிரற்ற ஆட்டினை தலைகீழாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார். இடது கரத்தில் வாய் குறுகிய குடுவையைப் பிடித்துக் கொண்டிருக்கிறார். இடது தோளின் மீது `பரசு’ எனும் கோடரியை சாய்த்து வைத்துக் கொண்டிருக்கும் கோலத்தில் காணலாம். சிவனது தலை முடியமைப்பு சடையாக இன்றி நீண்ட புரி குழல்களாலான கற்றைகளாக உள்ளது. இக்குழற் கற்றைகளையே, தலையைச் சுற்றிலும் தலைப்பாகை அணிவது போல் அலங்கதித்துக் கொண்டுள்ளார்.

கன்னக் கதுப்பெலும்புகள் உயர்ந்தும், மூக்கு சற்றே சப்பையாகவும், நெற்றி குறுகலாகவும், கண்கள் சற்றே பிதுங்கியும் அமைந்துள்ளது. கண்கள் சற்றே சரிந்து பார்க்கிறது. இது வேத றியில் “விருபாக்ஷன்” எனும் சிவநாமத்திற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. சிவனின் காதுகள் துளையிடப்பட்டுள்ள வடிகாதுகளாக, தோள்களைத் தொடும் வகையில் தொங்குகின்றன.

அத்துளைகளில் குண்டலங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இரு கைகளிலும், முழங்கைக்கு மேலே அங்கதா எனப்படும் அழகிய தோள்வளைகளும் மணிகட்டுக்கு மெலே பல வடிவங்களில் செய்யப் பட்ட ஐந்து ஐந்து வளையலகளும் அணிந்துள்ளார். சிற்பத்தை நுணுக்கமாக நோக்கினால், சிவன் மிக மெல்லியதான நெய்யப்பட்ட இடையாடைஉடுத்தியுள்ளது தெரியும். ஆயினும் உள்ளுருப்புகள் தெரிவதாக உள்ளது, ஆனால் தினசரி பூஜையில் மேலாடை சார்த்தியே தரிசனம் தரப்படும்.

தலையில் ஜடாபாரமாக முடி அலங்காரம். காதுகளில் பத்ர குண்டலங்கள். மலர்ந்த முகத்துடன் காட்சி தருகிறார். சிவன் அபஸ்மார புருஷனின் அல்லது அரக்கனின் தோள்கள் மீது தன் கால்களை விரித்து ஊன்றி நிற்கிறார். கூன் விழுந்து குறுகிக் காட்சியளிக்கும் அபஸ்மார புருஷனோ, தன்னுடைய கால்களுக்கருகில் கைகளை ஊன்றி அமர்ந்துள்ளான். அவருடைய காலின் கீழே யக்ஷன் காலை மடக்கி அமர்ந்து, குனிந்த நிலையில் இறைவனைத் தாங்கிக் கொண்டிருக்கிறான். அவனது தலைமுடி ஜடாமகுடம் போலவும், கழுத்தில் மணிமாலையும் காட்சியளிக்கின்றன. குள்ளமான தடித்த உடலுடன் காணப்படும் இவனுடைய காதுகள் படர்ந்து கூர்மையாகவும் உள்ளது. இருப்பினும் இவனது முகத்தில் ஒருவித இளிப்பு காணப்படுவதால் இவன் மகிழ்ச்சியாகவே இருக்கிறான் எனத் தெரிகிறது.

நின்ற உருவத்திற்கு மேல் சிவலிங்கத்தின் உருண்டையான ருத்ரபாகம். பின்புறம் பட்டையான வடிவமைப்பு காணப்படுகிறது. சிவலிங்கத்திற்கு பொதுவாக அடிப்பகுதியில் ஆவுடையார் காண்பிக்கப் பெறும். இக்கோவிலில், சிவலிங்க வடிவத்தின் சதுரவடிவமான கீழ்பகுதி (பிரம்மபாகம்) வட்டக்கற்களால் ஆன பீடத்தில் சொருகி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு `அர்க்கபீடம்’ என்பது பெயர். கருவறையின் மேல் உள்ள விமானத்தின் பின்பகுதி அரைவட்டமாக உள்ளது. இதுவும் லிங்க வடிவமாக காட்சி அளிப்பதால், `லிங்க கீர்த்தி விமானம்’ என அழைக்கின்றனர்.

கருவறையில் வழிபடப்பெறும் சிவலிங்க வடிவம் மிகவும் தொன்மையான வடிவமாக அறிஞர்களால் கருதப்படுகிறது. இக்கோவிலைச் சீரமைக்கும்போது கோவிலில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இக்கோவில் பிற்கால பல்லவர் காலம் முதல் கி.பி., 14ம் நூற்றாண்டு வரை தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் அடைந்து வழிபாடுகள் நடைபெற்று வந்துள்ளதை அறிய முடிந்தது. ஆய்வின்போது சிவப்பு வண்ண பூச்சு பூசப்பட்ட பானை ஓடுகள், கறுப்பு – சிவப்பு பானை ஓடுகள் கிடைத்தன. மேலும் லிங்கத்தைச் சுற்றி வேலைப்பாடு மிக்க கருங்கற்களால்ஆன வேலி போன்று அமைக்கப்பட்டுள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதை `சிலா வேதிகலிங்கம்’ எனக் குறிப்பிடுகின்றனர்.

இங்கு நடைபெற்ற ஆய்வின் போது கிடைத்த தொல் பொருட்கள், மண் அடுக்குகள் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது குடிமல்லம் கோவிலில் காணப்படும் சிவனது வடிவம் கி.மு., 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனவும், மிகவும் தொன்மையான வடிவம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சைவ சமயத்தில் பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், பைரவம் என்ற பிரிவுகள் உண்டு.`பாசுபதம்’ தொன்மையான வழிபாடாகும். குடிமல்லம் கோவிலில் காணப்படும் வடிவத்தின் வழிபாடு பாசுபத சித்தாந்த வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டது எனக் கருதப்படுகிறது.

குடிமல்லம் லிங்கத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள்ள சிவன் உருவத்திற்கும் – சாஞ்சி ஸ்தூபத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள்ள யஷன் உருவத்திற்கும் மிக நெருக்கமான உருவ ஒற்றுமை உள்ளதை அறிஞர் பெருமக்களும் ஏற்கின்றனர். முகம், காதுகள், தோள்கள் ஆகியனவற்றில் மட்டுமின்றி – காதணிகள், கையணிகள், கழுத்து மாலை ஆகிய அணிகலன்களின் வேலைப்பாடு, உடை உடித்தியிருக்கும் பாங்கு குறிப்பாகக் குஞ்சம் போன்ற மடிப்புகள் கால்களுக்கு இடையில் கட்டப்பட்டுருக்கும் விதம் ஆகிய இத்தனை அம்சங்களிலும் இவ்விரு உருவங்களும் ஒரே மாதிரியில் அமைந்துள்ளன. கி.மு., 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த உஜ்ஜெயினியில் கிடைத்த தாமிர காசுகளில் குடிமல்ல லிங்க உருவம் உள்ளது.

இக்கோயில் பற்றிய ஒரு அதிசய நிகழ்வு உள்ளூர் மக்கள் கூறுவது: 60 ண்டுகட்கு ஒருமுறை பரசுராமேஷ்வரர் உள்ள கருவறையுள் வெள்ள நீர் நிறைந்து அடுத்த நாள் வடிவது. டிசம்பர்-4, 2005 அன்று நீர் வந்து சில நிமிடங்களில் வடிந்ததாம். 1995ல் இது போல் நிகழ்வு இருந்ததாக உள்ளூரின் பெரியவர்கள் மூலம் அறியலாம். நிலத்தடி நீர் 300அடிக்கு கீழ் இருக்க இது அதிசயம் என் அகழ்வுத்துறையும் ஏற்கிறது.

லிங்கத்தில் உள்ள சிவன் வடிவில் கோடரி எனும் பரசு உள்ளமையால் இவர் பரசுராமேஷ்வரர் எனப்படுகிறார். வேதங்களின் உருத்திரன் எனும்படி வேடனுருவில் சிவனுள்ளதால் வைதிகலிஙம் எனின்றனர். இன்னுமொரு சாரார் கூறும் கதை- தன் தந்தை ஜமதக்னி முனிவர் ணைப்படி தன் தாயைக் கொன்ற பரசுராமர், அப்பாவம் நீங்க இங்கே வந்து தவம் செய்திட, அருகிலுள்ள சுனையில் தினம் ஒரு பூ மட்டும் மலரும், அதற்கு காவலாக சித்திரசேனன் எனும் யக்ஷ்னை நியமித்தார். பிரம்மாவின் பக்தானான சித்திரசேனன் ஒரு நாள் வலில் தானே வேட்டைக்கு பரசுராமர் சென்று இருந்தபோது தானெ மலரைக் கொய்து பூஜை செய்திட, விபரமறிந்த பரசுராமர் போர் தொடுக்க, 14 ண்டுகள் போர் நட்ந்தும் யாருக்கும் வெற்றி இல்லை, சிவபெருமான் இருவரையும் தன்னும் ஏற்றுக் கொண்டார். மூல லிங்கம் -சிவன்; பரசுராமர்- விஷ்ணு அவதாரம், யஷன் பிரம்மாவினம்சம்- எனவே மும்மூர்த்திகளும் உள்ள லிங்கமும் கும்.

லிங்கம் தரையை விட பள்ளத்தில் உள்ளது. தெலுங்கு மொழியில் குடி எனில் கோவில்; பள்ளத்தில் குடி கொண்டுள்ளதால் குடிபள்ளம். கல்வெட்டுகளில் இக்கோவில் விப்பிரமேடு என அழைக்கப்பட்டுள்ளது. சாதவாகனர்களின் காலத்தின் பல பொருட்கள் (வ.கா.1-2 நூற்றாண்டு) புதைபொருள் ஆய்வில் கிடைத்துள்ளது.

உஜ்ஜயினியில் கிடைத்துள்ள சில தாமிர காசுகள் – வ.கா.மு.3ம் நூற்றாண்டினதில் குடிமல்லம் லிங்கம் இடம் பெற்றுள்ளதாக அறிஞர்கள் காட்டுகின்றனர். மதுரா அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் ஒரு சிற்பத்தில் முதல் நுற்றாண்டினதில் குடிமல்லம் லிங்கம் போல் செதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து வசதிகள் இல்லாத காலகட்டத்தில் தென் நாட்டின் உருவம் வடநாடு செல்ல ஓரிரு நூற்றாண்டுகள் நிச்சயம் ஆகும் என்கையில் குடிமல்லம் சிவலிங்கம் வ.கா.மு.500 வாக்கிலானது என பல வரலாற்றாசிரியர்கள் ஏற்கின்றனர்.
9mm_fan is offline



Reply to Thread New Thread

« Previous Thread | Next Thread »

Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests)
 

All times are GMT +1. The time now is 01:14 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Search Engine Optimization by vBSEO 3.6.0 PL2
Design & Developed by Amodity.com
Copyright© Amodity